செட்டிக்குளம் வைத்தியசாலை ரூ. 72 மில். செலவில் அபிவிருத்தி

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் செட்டிக்குளம் தள ஆஸ்பத்திரி 72 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதியை வழங்க ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்திருக்கிறது.

இதனடிப்படையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்னிலையில் நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல கஹந்த லியனகேயும், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜகத் அபேசிங்கவும் கைச்சாத்திட்டனர்.

இந்த நிதியுதவியின் கீழ் 400 படுக்கைகளைக் கொண்ட ஆஸ்பத்திரியாக செட்டிகுளம் தள வைத்தியசாலை மேம்படுத்தப்படும் என்று அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். தற்போது இந்த ஆஸ்பத்திரியில் 131 படுக்கைகளே இருப்பதாகவும் அவை அப்பிரதேசத்தில் தற்போது தங்கியுள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவை வழங்கப் போதியதாக இல்லை என்பதைக் கருத்திற் கொண்டு இந்த ஆஸ்பத்திரியை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *