ஸ்ரீ ஜெயவர்தனபுர மாணவனொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது. பல்கலைக்கழக மாணவனொருவரை கத்தியால் குத்திக் கொன்றதுடன், மற்றொரு மாணவனை கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியதை ஒப்புக்கொண்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனுக்கே இந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஹங்கொடவிலவில் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலில் மாணவனொருவர் கொல்லப்பட்டார். இந்த மாணவன் கொல்லப்பட்டது தொடர்பான குற்றத்தை பிரதிவாதி நீதிபதி முன்னிலையில் ஒப்புக் கொண்டதுடன், இந்தச் சம்பவத்தில் மற்றொரு மாணவனை கத்தியால் குத்தி காயப்படுத்தியது தொடர்பாகவும் அந்த மாணவன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அங்கு இடம்பெற்ற மோதலில் மாணவனொருவனது உயிரை பறித்ததற்காக 5 வருட ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையை மேல் நீதிமன்றம் விதித்தது.
இதைவிட குற்றவாளிக்கு 50,000 ரூபா அபராதம் விதித்த மேல் நீதிமன்றம், கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக நாலரை இலட்சம் ரூபா வழங்க வேண்டுமெனவும் மற்றொரு மாணவனைப் படுகாயப்படுத்தியதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையும் விதித்த மேல் நீதிமன்றம், 5,000 ரூபா அபராதம் விதித்ததுடன், படுகாயமடைந்த மாணவனுக்கு 50,000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டது.