இரணைப்பாலை முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில்

army-s-l.jpgபுலிகளின் முக்கிய தளமாக விளங்கிய புதுக்குடியிருப்பு இரணைப்பாலை முழுவதையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். இரணைப்பாலை கைப்பற்றப்பட்டதன் மூலம் புலிகளின் புலனாய்வுத்துறை தலைவரின் முக்கிய தளம், அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த அவர்களது இறுதி பிரதான நடவடிக்கைத் தலைமையகத்தையும் படையினர் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது அவர்களை 25 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு ஏ-35 வீதியின் ஒன்றரை கிலோ மீற்றருக்கு மேற்பட்ட பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது ஏ-35 பிரதான வீதியூடாகவும் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் உட்பட முக்கிய தலைவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த அதி சொகுசுகளைக் கொண்ட வீடுகள், உட்பட பாதுகாப்பு அரண்களையும் படையினர் இங்கு கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் புலிகள் தங்களது அதி உயர்பாதுகாப்பு வலயங்களில் நன்றாக பயன்படுத்திவந்துள்ளதற்கான சகல தடயங்களும் காணப்படுவதாக வன்னி கள முனையிலுள்ள படை வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசத்திலிருந்து செய்மதி தொலைத்தொடர்பு கருவிகள், அதி நவீன தொலைத் தொடர்பு உபகரணங்கள் உட்பட பல முக்கிய பொருட் களும், அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ள படையினர் உழவு இயந்திரம், வான், கப் வண்டி உட்பட ஏழு வாகனங்களை படையினர் இந்த நடவடிக்கையின் போது நிர்மூழமாக்கியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் பலமுனைகளில் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள சிறிய பிரதேசத்தை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா ஆகியோர் தலைமையிலான மூன்று படைப் பிரிவுகளும் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *