புதுக் குடியிருப்பு பகுதியில் புலிகளுக்கெதிராக கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் படையினர் நேற்று புலிகளின் காவல் நிலையம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏ-39 வீதியில் புதுமாத்தளன் பிரதேசத்துக்கு அருகில் அமைந்திருந்த புலிகளின் இந்தக் காவல் நிலையத்தை நேற்றுக் காலை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 8ஆவது கஜபா படையணியினர் பல மணிநேர கடும் தாக்குதல்களின் பின்னர் கைபற்றியுள்ளனர்.
இங்கு இடம்பெற்ற மோதல்களின்போது 9 எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். படை வீரர்கள் சிலரும் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.
முள்ளியவெளி பகுதியில் புலிகள் நடாத்தி வந்த காவல் நிலையமே புதுமாத்தாளன் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்ததாக களமுனையிலுள்ள படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். காவல் நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.