வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளதோடு மேலும் பொருட்களை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என இலங்கை செஞ்சிலுவைச்சங்க வவுனியா கிளையின் பொருளாளர் கே. தனபாலசிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
பூந்தோட்டம் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகத்தையும் மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன், எமது தொண்டர்கள் 50 பேரை பொது அரசினர் வைத்தியசாலையில் 24 மணிநேர மனிதாபிமான பணிகளில் அமர்த்தியுள்ளோம். காயங்களுடன் வந்துள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை எமது தொண்டர்கள் வழங்கிவருகின்றனர்.
சைவப்பிரகாச வித்தியாசாலை, காமினி வித்தியாசாலை நலன்புரி நிலையங்களில் இரவு நேரத்தில் இரண்டு நோயாளர் காவு வண்டிகள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை நோயாளர்கள் அவசர தேவைக்கு பயன்படுத்திகொள்ள முடியும்.
மேலும், இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் வழங்கும் மனிதாபிமான பணிகளை அறிந்துகொண்ட திருமலை கிளை 5 இலட்சம் ரூபாவினையும், அம்பாறை மாவட்ட கிளை 3 இலட்சம் ரூபாவினையும், எமக்கு அனுப்பிவைத்துள்ளது. குருநாகல் கிளையினர் 2 ஆயிரம் லீற்றர் கொள்வனவு கொண்ட 20 நீர்த்தாங்கிகளை அனுப்பியுள்ளனர். 3 இலட்சம் ரூபா பணம் கனடிய செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக எமக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியானது நலன்புரிநிலைய மக்களுக்கு உலருணவு நிவாரணப் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படும்.
தலைமை அலுவலகத்திலிருந்து சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் லீற்றர் கொள்வனவு கொண்ட இரண்டு தண்ணீர் பௌசர்கள் கிடைத்துள்ளன. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு இதன்மூலம் குடிநீர் விநியோகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்றார்.