பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமர் போட்டியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதருமான ஷபாஸ் ஷெரீப் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்திருந்த நிலையில் ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தெரிவாகியுள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
16 ஆயிரம் கோடி ஊழல் வழக்குகள் உள்ள ஒருவரை ( ஷபாஸ் ஷெரீப்) பிரதமராக தேர்வு செய்திருப்பதை விட நாட்டிற்குப் பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
நாங்கள்(பிடிஐ கட்சி எம்.பி.க்கள்) பாராளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். திருடர்களுடன் பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர மாட்டேன் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எம்.பி.பதவியை ராஜினாமா செய்யும் இம்ரான்கானின் முடிவை அவரது கட்சியை சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் உறுதி செய்துள்ளார்.
மேலும் புதன்கிழமை பெஷாவரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இம்ரான் கான் பாகிஸ்தான் ஆட்சி மாற்றத்தில் தொடர்புடைய வெளிநாட்டு சதிக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுப்பார் என தெரிவித்தார்.