இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் நேற்று வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். விசேட ஹெலி மூலம் வவுனியாவைச் சென்றடைந்த இராணுவத் தளபதியை வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற விசேட கலந்துரையாடலின் போது வன்னியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை இராணுவத் தளபதி கள தளபதிகளிடம் கேட்டறிந்துள்ளார். அதிகூடிய முன்னெச்சரிக்கையுடன் புலிகளிடம் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் மீட்டெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேசமயம், படையினரின் போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக யாழ்-கண்டி ஏ-9 வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும் புலிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எந்தவித தாக்குதல்களையும் நடத்தாத வகையில் அந்த வீதி ஊடாக செல்லும் படையினரின் வாகன தொடரணிக்குத் தேவையான போதிய பாதுகாப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி இந்த விஜயத்தின் போது உத்தரவிட்டுள்ளார்.