32 வருடங்களில் இல்லாத அளவில் வீசும் மிக மோசமான யூனிஸ் புயல் பிரித்தானியாவை தாக்கியது !

பிரித்தானியாவை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று வீசுவதுடன், புழுதி மற்றும் பல்வேறு கழிவுப்பொருட்கள் காற்றில் பறக்கின்றன. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும்,  பயண திட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த புயலானது கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் வீசும் மிக மோசமான புயல் என கருதப்படுகிறது. புயல் தாக்கியபோது வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக பள்ளிகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டன. பேருந்து மற்றும் ரெயில் சேவைகள், விமானங்கள் மற்றும் படகுப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளுக்கு தேவைப்பட்டால் இராணுவம் தயார் நிலையில் உள்ளது. வானிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில், 10 கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பெருமளவில் சேதம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று வடக்கு ஜெர்மனியைத் தாக்கும் என்றும் இரவில் கிழக்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியின் வடக்கு கடலோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *