அடுத்தடுத்து பதவி விலகிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் மூத்த உதவியாளர்கள் !

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள், டவுனிங் ஸ்ட்ரீட்டில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

கொள்கை திட்ட தலைவர் முனிரா மிர்சா தனது பதவியை இராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே தகவல் தொடர்பு இயக்குனர் ஜெக் டோய்ல் தனது இராஜினாமாவை உறுதிப்படுத்தினார்.

வியாழக்கிழமை, தலைமைப் பணியாளர் டான் ரோசன்ஃபீல்ட் மற்றும் மூத்த சிவில் ஊழியர் மார்ட்டின் ரெனால்ட்ஸ் ஆகியோரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் ஜோன்சன் தனது கட்சிக்குள்ளேயே அவரது தலைமை குறித்து கேள்விகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த உயர்மட்ட உதவியாளர்களின் இந்த இராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

தகவல் தொடர்பு இயக்குனர் ஜெக் டோய்ல், ‘சமீபத்திய வாரங்கள் எனது குடும்ப வாழ்க்கையில் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறினார்.

10ஆம் எண் அலுவலக செய்தித் தொடர்பாளரின் அறிக்கையில், ‘ரோசன்ஃபீல்ட் தனது இராஜினாமாவை வியாழக்கிழமை பிரதமரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது இடத்திற்கு இன்னொருவரை நியமிக்கும் வரை அவர் தொடர்ந்து பணியில் இருப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் முதன்மை தனிப்பட்ட செயலாளரான ரெனால்ட்ஸ், பின்னர் வெளியுறவு அலுவலகத்தில் ஒரு பணியை தொடருவார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *