இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் குறித்தும் அந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாட்டு பிரதிநிதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்க உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை அமர்வு இன்று (02) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்தஅமர்வில் கலந்து கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவ சேவை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு நேற்று முன்தினம் இரவு ஜெனீவா பயணமானது.
மேற்படி அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெற உள்ளதோடு மோதல் காரணமாக இடம் பெயர்ந்துள்ள மக்கள் குறித்தும் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் இங்கு விளக்கமளிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாட்டு ஐ. நா. மனித உரிமை பேரவை பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்.
வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் உணவு மற்றும் தங்குமிட வசதி மற்றும் சுகாதார வசதிகளின்றி கஷ்டப்படுவதாகவும் சில தரப்பினர் சர்வதேச மட்டத்தில் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் இது தொடர்பான உண்மை நிலைமைகளை அமைச்சர் இங்கு எடுத்துரைப்பார் எனவும் அமைச்சு உயரதிகாரி குறிப்பிட்டார்.
மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பும் யோசனை இங்கு முன்வைக்கப்பட்டால் அதனை இலங்கை ஆட்சேபிக்கும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க, சட்டமாஅதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் ஜெனீவா சென்றுள்ளனர்.