சிறுவர்களைப் புலிகளிடமிருந்து காப்பதில் அரசு கரிசனை- ஜனாதிபதி

mahinda.jpgநாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்பதோடு சிறுவர்களைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்புடன் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிறுவர்களைப் படையில் சேர்த்துக் கொள்வதற்கு எதிரான தேசிய இயக்கமொன்று நேற்றுக் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இச்செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது அரசாங்கத்துக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஓர் இயக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சிறுவர் படைக்கு எதிராக இன்று நாமே எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது சமூகத்தைச் சீரழிந்து வந்த கொடிய பயங்கரவாதத்திலிருந்து எமது பிள்ளைகளை மீட்பது மிக முக்கியமாகும்.

சிறுவர்களை படையில் சேர்த்துக்கொள்வதை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை புலிகள் நிராகரித்தனர். உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின்படி கடந்த 2003ஆம் ஆண்டுக்கு முன்னர் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டோரில் 60 வீதமானோர் 18 வயதுக்குக் குறைந்தவர்களாகவே காணப்பட்டனர். அதாவது 14000 பேரில் 8500 பேர் சிறுவர்களாவர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் புலிகளால் பலவந்தமாக சேர்த்துக்கொள்ளப்பட்ட 6288 பேரும் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்றும் அவர்களுள் 3809 சிறுவர்களும் 2478 சிறுமியர்களும் காணப்பட்டதாகவும் அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டம் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் காலங்கடந்தாவது இதனைச் செய்துள்ளோம். இது எமது எதிர்கால பரம்பரையான சிறுவர்களுக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமானதொரு பணியாகும். அவர்களுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய நாம் எந்நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சிறுவர்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவதைத் தடுப்பதோடு, ஏற்கனவே சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களை விடுவிப்பதற்குமான பணிகளை இந்த இயக்கம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *