மேல் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் வேட்பாளர் பட்டியல்கள் தயாராகியுள்ளதாகவும் தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி இன்று செவ்வாய்க்கிழமை அல்லது நாளை புதன்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேல்மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே கட்சி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ஹஸன் அலி அந்த இரண்டு மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் கூறினார்.
கொழும்பு மாவட்டத்துக்கான வேட்பாளர் பட்டியல்கள் இன்று காலை பூர்த்தி செய்யப்படவிருப்பதாகவும் அப்பணி நிறைவுற்றதும் தாமதமின்றி இன்று அல்லது நாளையே வேட்புமனுதாக்கல் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.