அம்பாறை இங்கினியாகலையில் புலிகளின் ஆயுதக் குழுக்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களுள் இரண்டு சிறுவர்களும் நான்கு பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இங்கினியாகலையிலிருந்து 35 கிலோமீற்றர் தொலை விலுள்ள கிரிமிட்டியாவ என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 தொடக்கம் 5 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.
கிராமத்துக்குள் புகுந்த புலி ஆயுதக்குழு கண் மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மற்றும் வாள் வீச்சுக்களை மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் கொல்லப்பட்டதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அன்றையதினம் மேலதி கமாக ஆறுபேர் உயிரிழந்தனர். நேற்றுடன் இச்சம்பவத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து ள்ளது. உயிரிழந்துள்ள இரண்டு சிறுவர்களுள் இரண்டு வயதுக் குழந்தையும் எட்டு வயது சிறுவனும் அடங்குவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக அந்தப் படைக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர கூறியிருக்கின்றார். அந்தப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து கூட்டாக தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தப்பி வந்த கிராமவாசிகளின் தகவல்களின் படி பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அங்கு வந்த ஆயுதம் தரித்த நபர்கள் குடிசைகளுக்கு தீ வைத்து பின்னர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்ததாக அறிய வருகின்றது. சம்பவத்தையடுத்து கிராமவாசிகள் தற்போது இடம் பெயர்ந்து அங்குள்ள பாடசாலைக் கட்டிடமொன்றில் தற்காலிகமாக தங்கியிருக்கின்றனர்
இதேவேளை இந்தத் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.