ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள் கடந்த முறை தங்களது ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறை பெண்களுக்கு உரிய மரியாதை, உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் வேலைக்கு செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என ஆரம்பத்தில் தெரிவித்திருந்த போதும் அவர்களுடைய அண்மைக்கால நகர்வுகள் பாரிய அதிருப்தியை அனைவரிடமும் ஏற்படுத்தி வருகின்றது.
முக்கியமாக உயர் பதவிகளில் இருந்து பெண்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சுப்பதவிகள் எதுவும் பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கான் வாழ் பெண்களிடையே அதிருப்தி மேலெழ ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் பொலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த பெண் பொலீஸ் அதிகாரி பானு நிகரா. ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பானு நிகரா வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றனர்.
ஆனால் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.