மத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி வழக்குத் தொடரத்திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துகள் மிகவும் மோசமான வகையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது.