இனப் பிரச்சினைக்குப் பலராலும் நிராகரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனையைத் தீர்வாக சமர்ப்பிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டு விட்டதற்காக பிரிவினைவாத பிரச்சினையும் , தேசியப்பிரச்சினையும் முடிவுக்கு வந்து விடப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளை அடுத்து அது தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கற் சபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
“வழமை போன்றே இம்முறை தேர்தலும் நீதியானதும் சுதந்திரமானதாகவும் நடைபெறவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றை நியமிக்க இன்று கூட ஜனாதிபதியும் அரசாங்கமும் தயாராகவில்லை. இவ்வாறான தேர்தல்களை நடத்தி வெற்றிகளை பெறும் நோக்கமே இதற்குக் காரணம்.
இந்தத் தேர்தலில் பெற்ற வெற்றியை இறுதி யுத்தத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாக கோரும் அளவுக்கு அரசாங்கம் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் , 30 தொடக்கம் 40 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது ஒருபக்கம் அரசாங்கத்துக்கு கிடைத்த தோல்வியே.
எனவே இந்தத் தேர்தலை இறுதி யுத்தத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாக கோரியதன் மூலம் அரசாங்கம் படையினரது வெற்றிகளை அவமதித்து தரம் தாழ்த்தி விட்டது.
நாடு இன்று அபாயகரமானதொரு நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்காலத்தில் அதைப் பகிர்ந்து கொண்டு செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இதேநேரம் அரசாங்கம் பலராலும் நிராகரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனையை முன்வைக்க செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராகவே இந்த பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
படையினரின் வெற்றிகளைப் பறிக்கும் இந்த முயற்சிகளை தோற்கடிப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்க நாம் தயாராக இருக்கிறோம். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க எவரும் முயற்சிப்பார்களாயின் அதை மக்கள் எதிர்ப்பார்கள் என்று நம்புகிறோம். அதற்கு ஜே.வி.பி. தலைமை வகிக்கும்.
எதிர்காலத்தில் நாம் முகம் கொடுக்கவுள்ள சமய, சமூக, பொருளாதார, கலாசார, நிதிநெருக்கடிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமோ , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடமோ பதில் கிடையாது. ஜே.வி.பி. யிடம் மட்டுமே அதற்கான பதில் இருக்கிறது.
இதேநேரம் இன, மத,குல பேதங்களின்றி மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலுமே ஏனைய ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகள் ஆகிவிட்டார்கள் என்பதில் எமக்கு இன்னும் நம்பிக்கையில்லை. ஏனெனில் எவரும் அதிகாரப் பகிர்வினையும் பிரிவினைவாதத்தையும் முற்றாக நிராகரித்து விடவில்லை.
அதிகாரப் பகிர்வை வழங்க அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைக்காத போதிலும் அது பற்றியே அரசாங்கம் பேசி வருகிறது. ஜனாதிபதியோ வெளிநாட்டு செய்தி சேவைக்கு (அல்ஜசீரா) அதிகாரப் பகிர்வு என்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றையாட்சி என்றும் கூறி ஏமாற்றி வருகிறார்.
இந்த அரசாங்கத்தால் பிரிவினைவாதத்தை தோற்கடிக்க முடியாது. ஏனெனில் அரசாங்கத்திலேயே அவ்வாறானவர்கள் இருக்கின்றனர். புலிகள் முடக்கப்பட்டு விட்டதற்காக பிரிவினைவாதமும் தேசியப் பிரச்சினையும் முடிந்து விடாது. சகல இன மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படும்வரை பிரச்சினைகள் முடியப் போவதில்லை. சம அந்தஸ்து என்பதற்கு அர்த்தம் தெரியாத கட்சிகளினால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது’ என்றார்.
palli
இதோடா வந்திட்டார் வில்லங்கம் பிடித்த இலங்கையின் சுப்பிரமணியசாமி. இவரே இரு பிரிவு. இதிலை மற்றவர்கள் பிரிவு வைத்திருப்பதை கண்டு பிடித்துவிட்டாராம்
//ஐக்கிய தேசியக் கட்சியிடமோ , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடமோ பதில் கிடையாது. ஜே.வி.பி. யிடம் மட்டுமே அதற்கான பதில் இருக்கிறது.///
ஆக மொத்தத்தில் உங்களுக்கு தெரிந்த பதிலுக்கான கேள்விகளுடன்தான் சபைக்கு போவிர்களாக்கும். வடக்கு கழுவி துடைத்தபின் மகிந்தா வத்திருக்கிறார் கச்சேரி(ஜே வி பி) உங்களுக்கு. அதுவரை மகிந்தாவுக்கு (அரசுக்கு) மூக்கில் தும்பு விடலாம். தும்ம மாட்டார்கள்.
santhanam
புலிக்காக ஒலமிடும் தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் வீரப்பனிற்கு பின்னால் நின்றவர்கள் அவனின் கொலைக்கு பின் அவர்கள் வீரப்பனைபற்றி முச்சேவிட்டதில்லை. அதே நிலைப்பாடுதான் ஈழத்திலும் ஏற்படும்.
palli
சந்தானம் இது தவறான கருத்து.
எல்லோரையும் அப்படி சொல்லி விட முடியாது அல்லவா??