தமிழ்நா்டில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிவந்த பெரியார், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இதற்காக கிளர்ச்சி ஒன்றை அறிவித்தார்.
தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் இந்தப் போராட்டம் நடக்குமென்றும் திருநீறு பூசித்தான் கோயில்களில் நுழையலாம் என்றால் தொண்டர்கள் பூசிக்கொள்ளலாம் என்றும் பெரியார் கூறினார்.
இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். தற்போதைய திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.
இந்நிலையில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.