2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கிலமொழி ஆண்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தில் ‘நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் ஆங்கிலக்கல்வி’ என ஜனாதிபதி அறிவித்ததை தற்போது நடைமுறைப் படுத்தியுள்ளார் என தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இதற்கு இந்தியப் பேரறிஞர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கிலமொழி ஆண்டாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, இதனை ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கல்வியின் பிதா என வர்ணிக்கப்படும் இந்தியப் பேரறிஞர் நாராயணமூர்த்தி, ஐதராபாத் ஆங்கிலமொழிப் பல்கலைக்கழக உபவேந்தர் எபெயுன் மயூரியா, ஆங்கில மொழிப் பயிற்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் சுனிமல் பெர்னாண்டோ, செயலணியின் இனைப்புச்செயலாளர் ரஞ்சித் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்ததாவது,
வரலாற்றில் முதல் தடவையாக ஆங்கில மொழிப் பயிற்சிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. நாட்டின் பிரதான செயற்திட்டமான மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது. ஆங்கில மொழிப் பயிற்சி என்பது நாட்டின் கிராமியப் பகுதி பிள்ளைகளை இலக்காகக் கொண்டே ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஜனாதிபதி செயலகம் உட்பட பல்வேறு நிறுவனங்களும் பங்களிப்பினையும் உந்துதலையும் வழங்குகின்றன எனவும் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய ஐதராபாத் பல்கலைக் கழக பேராசிரியர் எபெயும் மயூரியா;இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நட்பு பேணும் நாடுகள்.இலங்கை அரசாங்கம் ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்ப ஆண்டாக இவ்வருடத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள இத்தருணத்தில், இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இத்திட்டம் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.