இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில், சரித் அசலங்க 65 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா (13), ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 12 ஓவரில் இந்தியா 65 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 50 ஓட்டங்கள் சேர்த்தது. மணீஷ் பாண்டே 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டங்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார். குருணால் பாண்ட்யா 35 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 193 ஓட்டங்களுக்கு 7 இலக்குகளை இழந்து இந்தியா தத்தளித்தது.
8வது இலக்குக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது. சாஹர் 66 பந்துகளில் அரை சதமடித்தார். இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், இந்தியா 7 இலக்கு இழப்புக்கு 277 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
தீபக் சாஹர் 69 ஓட்டங்களுடனும், புவனேஷ்வர் குமார் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 84 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இந்திய அணி 2-0 என்ற அடிப்படையில் ஒரு நாள் சர்வதேச தொடரை கைப்பற்றியது.