தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். இதற்கமைய நிதி அமைச்சராக அவர் பதவி ஏற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சராக பதவியேற்றுள்ள பஷில்ராஜபக்ஷவை பெருமைப்படுத்தி யாழ்.நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் வெகுவாக புகழ்து முகநூல் தளத்தில் பதிவையொன்றையிட்டுள்ளார். வடக்கிற்கு வசந்தத்தை கொண்டுவந்தவர் – பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவித்த உன்னத தலைவர் என்றெல்லாம் குறித்த பதிவில் புகழ்ந்துள்ளார் அங்கஜன் இராமநாதன்.
இவ்வாறு புகழ்ந்து தள்ளியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தான் 2018 தேர்தல் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஒன்றின் போது விடுதலைப்புலிகளின் பாடலை ஒலிபரப்பி பெரிய சர்ச்சையில் மாட்டிக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் பெரும்பூகம்பமாகியிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் 2018ல் பேசியிருந்த சீ.வி.கே சிவஞானம் போராட்டத்தில் தொடர்புபடாதவர்கள் அதனை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் எனக்குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த அங்கஜன் இராமநாதன் “அது எங்களுக்கான போராட்டம். உணரவுப்போராட்டம். உரிமைப்போராட்டம். அதில் தமிழர்களாக எங்களுக்கெல்லாம் பங்கு இருக்கிறது எனக்கூறியிருந்த அதே அங்கஜன் இராமநாதன் தான் பஷில்ராஜபக்ஷவை பெருமைப்படுத்தி பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவித்த உன்னத தலைவர் என பாராட்டியுள்ளார்.
இரட்டை வேடம் போடுவது போன்றது தான் இதுவும். ஒன்று கோட்டுக்கு அந்தப்பக்கம் நில்லுங்கள் நேரடியாக – வலிமையாக ஆயுதப்போராட்டத்தை எதிருங்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போல. தவறு என்றால் தவறு தான். ஆயுதப்போராட்டம் தவறு என்றால் அது பற்றி புகழும் பாடலும் தவறே.
ஓட்டுக்காக யாழில் ஒரு அரசியல் முகம் – தென்னிலங்கையில் ஒரு அரசியல் முகம் என்றெல்லாம் காட்டாதீர்கள். இல்லாது விடின் கோட்டிற்கு இந்தப்பக்கம் நில்லுங்கள் வழமையான சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல போலித்தேசியம் பேசிக்கொண்டு நில்லுங்கள். நடுநிலமை என்ற பெயரில் ஏதோ போல செயற்படாதீர்கள்.
குறித்த பாடலில் ஆயுதக்கலாச்சாரத்தயோ புலிகளயோ ஊக்குவிப்பது போல இல்லை எனவும் அது தமிழர்களின் உணர்ச்சிப்பாடல் இல்லை எனவும் அவர் அன்று சப்பைக்கட்டு கட்டியிருந்தார். அந்தப்பாடலின் வரிகள் வருமாறு
“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா .இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா. தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன். தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு . வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம் .அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடாஅடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா. இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா. அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா . அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா . இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா . இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா .புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா . புலிகள் சேனையோ டெழுந்து நின்றுமே தடைகள் மீறட. தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா.”
என்றதாக அந்தப்பாடல் அமைந்திருக்கும்.
இது சிந்தனைக்கு மட்டுமே . மற்றும் படி கட்டுரையானது தனிப்பட்ட எந்த அரசியல் நோக்கமும் கொண்டதல்ல. ஒரு அரசியல் கொள்கை இருக்குமாயின் அதில் தெளிவாக நடை போடுங்கள். அபிவிருத்தியே உங்களை மக்கள் தெரிவு செய்தமைக்கான காரணம். அதற்கான நகர்வுகளை ஆரோக்கியமான தளத்தில் மேற்கொள்ளுங்கள்.