தேர்தலில் அரசு வென்றாலும் புலிகள் தாக்குதலை நிறுத்தமாட்டார்கள் -தோற்றுவிட்டால் அரசும் இராணுவ நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை

election_.jpgஅரசாங்கம் இன்று எங்கும் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் யுத்தம் பற்றித்தான். மக்களை ஏமாற்றும் இந்தத் தந்திரோபாய வார்த்தைகளை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். வடக்கில் யுத்தத்தை வெல்வதற்கு மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டுமென மகிந்த ராஜபக்ஷ கோருகிறார். இராணுவத்தினர் பெறும் யுத்த வெற்றிகளை மக்களுக்குக் காட்டி வாக்களிக்கக் கோருவது என்பது கடவுளின் உருவப்படத்தைக் காட்டி பூஜைப் பொருட்களடங்கிய தட்டைப் பேய்க்கு சமர்ப்பிப்பது போன்ற செயலை ஒத்ததாகும் என்று ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். கலேவெல நகரில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் தமது உரையில்;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்பது போல் வடக்கில் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சுதந்திர முன்னணிக்கு மக்கள் வாக்களித்தால் புலிகளின் அமைப்பு தமது தாக்குதலை இடைநிறுத்தி விடுமா? அல்லது மத்திய மாகாணத்தில் ஐ.ம.சு. முன்னணி தோல்வியடைந்தது என்பதற்காக இராணுவத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி விடுவரா? அவ்வாறு எதுவுமே நடைபெறப்போவதில்லை. அப்படியானால் ஏன் இவர்கள் இவ்வாறு யுத்தத்தை விற்று இராணுவத்தினரின் வெற்றிகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டு சென்ற போதும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நாம் கோரிய போதும் யுத்தம் முடிவடையும் வரையில் பொறுங்கள் என்று ஜனாதிபதி கூறினார். வயிற்றுப் பட்டிகளை இறுக்கிக் கொண்டு பொறுத்திருக்கச் சொன்னார். பெப்ரவரி 4 ஆம் திகதி யுத்தம் முடிவடைந்திருப்பதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். நாட்டின் பிரச்சினைகள் இனி எவ்வாறு எப்போது தீர்க்கப்படப் போகின்றன என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஜனாதிபதி பதில் கூறுவாரா?

உருப்படியான திட்டங்கள் எதுவும் தன்னிடம் இல்லாத காரணத்தினால் மகிந்த ராஜபக்ஷ ஒரு புறத்தில் யுத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். மறுபுறத்தில் சிறிது சிறிதாக தேர்தல்களை நடத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைத்து வருகிறார். இரு வருடங்களாக தேர்தல்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. ஆனால், நாட்டின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. நாட்டை நிர்வகிக்கும் திறனற்றவர் மகிந்த ராஜபக்ஷ என்பதை இவற்றின் மூலம் உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத் தருமாறு நாம் கேட்டபோது மறுத்த அரசாங்கம் தமது அமைச்சர்களின் கொடுப்பனவுகளை வீட்டு வாடகை என்ற பெயரில் ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரித்துக் கொண்டது. சொந்த வீடுகளில் வசிக்கும் அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் வசிப்போருக்கும் ஒரு இலட்சம் ரூபாவை மாதாந்தக் கொடுப்பனவு மூலம் அதிகரித்துக் கொண்டனர்.

நுகர்வுப் பொருட்கள் பலவற்றின் விலை அதிகரிப்பினால் மக்கள் பல இன்னல்களுக்குள்ளாகி வருவதை அரசாங்கத்திற்கு விளக்கிக் கூறி மானிய அடிப்படையில் பொருட்களைப் பெற உதவுமாறு வேண்டினோம். யுத்தத்தைக் காரணம் காட்டி மக்களுக்கு மானியம் வழங்க மறுத்த ராஜபக்ஷ அரசாங்கம், கோதாபய ராஜபக்ஷவின் “”மிஹின் லங்கா’ விமான நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாவை நிவாரண உதவியாக வழங்கியது.

எனவே, அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்காவிட்டாலும் பரவாயில்லை. மாதாந்தம் அவர்களுக்கும் வீட்டு வாடகையாக 25 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வேண்டுகிறோம்.

உலக சந்தையில் பால்மாவின் விலை குறையும் போது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அதன் பயனை மக்கள் அடைய விடாமல் அரசாங்கம் இரண்டு விதமான வரிகளை விதித்துள்ளது. பால்மாவுக்கு 8 வீதமும் அதனைப் பைக்கற்றுகளில் அடைக்க 5 வீதமும் என வரிகளை விதித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தினமும் ஐயாயிரம் பேர் வரையிலானோரைக் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துப் பகலுணவுப் பொட்டலங்களையும் அன்பளிப்புப் பொருட்களையும் அரசாங்கப் பணத்தில் தாராளமாக வழங்குகிறார். வாக்காளர்களிடம் வாக்குகளை எதிர்பார்த்து பொருள் பண்டங்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்குதல் என்பது தேர்தல் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணான செயல் என 1960 ஆம் ஆண்டின் தேர்தல் சட்ட விதிகளின் 79 ஆவது பந்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பால்மாவுக்கான மானியத்தை பெற்றுத் தருவதற்கு முடியாதென மறுக்கும் ஜனாதிபதி தேர்தலையொட்டி மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி மாளிகையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வயிறார ஒரு வேளை உணவு கொடுக்கவே வேண்டும் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் சட்ட விதிகளை முற்றாக மீறியுள்ள ஜனாதிபதிக்கும் அவர்தம் சகாக்களுக்கும் எதிராக மனுவொன்றை நாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.

கடந்த தனது 3 வருட ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எவ்வித சேவைகளையும் செய்யாத மகிந்த ராஜபக்ஷ இறுதியாக இப்போது இராணுவ வீரரின் வெற்றிச் செயற்பாடுகளின் பின்னால் ஒளிந்து கொண்டு தனது இயலாமையை மறைத்துக்கொள்ளப் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் யாவரும் அறிவர் என்று கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *