ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக் கோரி ரஷ்யாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் !

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் திகதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது. அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனே ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.
பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளானதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.
தொடர் சிகிச்சையால் அலெக்ஸி நவல்னி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 24-ம் திகதி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். ஆனாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
தன்மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் ரஷிய அதிபர் புதினையே குற்றம் சுமத்தின.
இதற்கிடையேயும், கொடிய விஷத்தால் தாக்குதலில் இருந்து மீண்ட நவல்னி தான் மீண்டும் ரஷியாவுக்கு செல்வதாக அறிவித்தார். அதன்படி, ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் கடந்த 18ம் திகதி ரஷிய தலைநகர் மாஸ்கோ வந்தார். அவரை மாஸ்கோ விமான நிலையத்தில் ரஷிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக் கோரி தலைநகர் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது ஆயிர்க்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் கைது
அலெக்ஸி நவல்னியை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.   ரஷிய எதிர்கட்சி தலைவர் நவல்னியை விடுதலை செய்யக் கோரி நடந்த போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *