![]()
ஊடகவியலாளருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலையும் கண்டித்து கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஊடக ஒடுக்கு முறைக்கு எதிரான அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடக அமைப்புகள், இலங்கை ஆசிரியர் சங்கம், இடதுசாரி முன்னணி, புதிய சமசமாஜக் கட்சி, சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான மக்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் ஆகியன பங்கு பற்றின.
இதன் போது, தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், இது அரசின் பொறுப்பு, ஊடக அடக்கு முறையை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை வைத்திருந்ததுடன் அரசுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.