இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் பெய்ன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்போது, அமெரிக்கப் பிரஜையான கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்க தண்டனை சட்டக்கோவையின் 1091 ம் பிரிவின் கீழ் இனப்படுகொலை குற்றம் தொடர்பான 1000 பக்கங்களைக் கொண்ட மாதிரி குற்றப்பத்திரமொன்றை தயாரித்துள்ளதாகவும், அதை இரு வாரங்களுக்குள் வெளியிடுவதுடன் அமெரிக்க நாடாளுமன்றம் நீதி மற்றும் வெளிவிவகாரத் திணைக்களங்கள் ஆகியவற்றிடம் கையளிக்கவுள்ளதாகவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.இதனை ஆய்வு செய்து, அமெரிக்க அரசே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் கூறினார்.