“டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூர் அணியின் நிலைமை படுமோசமாகியருக்கும். தோல்விக்கான பொறுப்பை கோலி ஏற்று தலைமையிலிருந்து விலக வேண்டும்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை பெற்றுத் தந்தவருமான கவுதம் கம்பீர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அந்தப்பேட்டியில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது::-
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவராக விராட் கோலி 8 ஆண்டுகள் பணியாற்றி விட்டார். ஆனால் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. 8 ஆண்டு தலைமைத்துவம் என்பது என்பது ரொம்பவே அதிகம். பெங்களூர் அணி நிர்வாகம் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கு இதுவே சரியான தருணமாகும். கோப்பையை வெல்லாமல் எந்த தலைவராவது, எந்த வீரராவது ஒரே அணியில் இவ்வளவு காலம் நீடித்திருக்கிறார்களா? என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

எனவே இதற்கான பொறுப்பை கோலி தான் எடுத்துக் கொள்ள வேண்டும். விராட் கோலியுடன் எனக்கு எந்த பகைமையும் கிடையாது. பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு நானே பொறுப்பு என்று அவர் திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். நீங்கள் தான் தலைவர். வெற்றியின் போது கிடைக்கும் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும் போது, தோல்வியால் எழும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக ஆர்.அஸ்வின் 2 ஆண்டுகள் இருந்தார். அவர் சோபிக்கவில்லை என்றதும் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நாம் டோனி, ரோகித் சர்மா குறித்து பேசுகிறோம். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார். ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 தடவை கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். அதனால் தான் அவர்கள் நீண்ட காலமாக அந்தந்த அணிகளின் தலைவர்களாக தொடருகிறார்கள். ரோகித் சர்மா 8 ஆண்டுகளில் சாதிக்கவில்லை என்றால் நிச்சயம் கழற்றி விட்டிருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு வகையிலான அளவுகோல் இருக்கக்கூடாது. தலைவராக இருப்பவர் களத்தில் சாதகமான முடிவுகளை கொண்டு வர வேண்டும். அது தான் முக்கியம்.
‘நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறோம். அதற்கு நாங்கள் தகுதியான அணி’ என்று நீங்கள் (பெங்களூர்) சொல்லலாம். என்னை பொறுத்தவரை பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்றுக்கு ஒரு போதும் தகுதியான அணி கிடையாது. டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூரு அணியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். லீக் சுற்றில் கிடைத்த 7 வெற்றிகளில் அவரது அபாரமான பங்களிப்பால் 2-3 வெற்றிகள் கிடைத்தது. இல்லாவிட்டால் வெளியேறியிருக்கும். கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் ஒருங்கிணைந்த அணியாக அவர்கள் செயல்படவில்லை.
என கம்பீர் அந்தப்பட்டியில் கூறினார்.