அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே இரண்டாவது நேருக்குநேர் விவாதம் அக்டோபர் 15 ஆம் தேதி மியாமியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி விவாதங்களுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு கட்சிகளும், இதுதொடர்பாக மாற்றுத் தேதி தொடர்பான பரிந்துரையை தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக நேரடி விவாதத்தை காணொளி வாயிலாக நடத்த விவாதங்களுக்கான ஆணையம் முடிவு செய்தது. காணொளி மூலம் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுத்துவிட்டதை அடுத்து விவாதம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான கடைசி நேருக்கு நேர் விவாதம் வரும் 22ம் தேதி டென்னிசி மாநிலம் நாஷ்வில்லேயில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி விவாதங்களுக்கான ஆணையம் செய்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் யார் தேர்தலில் வெற்றிபெற போகின்றார்..? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்குபெறும் விவாதம் நடைபெற்று வருகிறது. அண்மையில் இதன் ஒரு கட்டமாக டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே இடம்பெற்ற விவாதத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் காரசாரமாக சாடியதுடன் விவாதநிறைவின் போது ஜோபிடன் ஜனாதிபதி ட்ரம்பை முட்டாள்த்தனமாக நடந்துடிகொள்பவர் எனக் குறிப்பிட்டிருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது.