கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள் மற்றும் விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் திருகோணமலைக்கு விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்காவின் யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டத் தளபதிகள் குழுவிற்கும் யு.எஸ். எயிட் உயர்மட்டக் குழுவிற்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருகோணமலையில் கிழக்கு மாகாணப் பிரதம செயலகத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் அவரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர்.கே. விக்னேஸ்வரன், ஊடகப்பேச்சாளர் ஆஸாத் மௌலானா ஆகியோர் பங்குபற்றினர். யு.எஸ்.எயிட் அமைப்பின் தலைமைப் பணிப்பாளர் ரிபெக்கா கொய்ன், யு.எஸ். பசுபிக் கமாண்ட் தளபதி மேஜர் ஜெனரல் தோமஸ் என். கொனன்ட் (தந்திரோபாயக் கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்), தெற்காசியப்பணிப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கல் சி பெற்றிகு? அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பாதுகாப்பு அதிகாரி லோறன்ஸ் ஏ. சிமித் ஆகியோரும் பங்குபற்றிய இச்சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது.