![]()
தமிழர்களுடைய தனிப்பெரும் பண்டிகை பிறக்கிறது. இச்சமயத்தில் மலையக சமுதாயம் பல துறைகளிலும் சுபீட்சமடைய வேண்டுமென வாழ்த்துகின்றோம். உழவர்கள் அறுவடை கண்டு மகிழ்ச்சி அடையும் ஒரு நன்நாள் இதுவாகும். இவ்வாறு அமைச்சரும், இ. தொ. கா. பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் விடுத்துள்ள பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது :- மலையக சமுதாயத்தில் அன்று தொட்டு இன்றுவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் போராடியும் சாணக்கியமான அணுகு முறைகளாலும் பரஸ்பர பேச்சுவார்த்தைகளாலும் ஈட்டித் தந்துள்ளது. இது நாங்கள் பெற்ற அறுவடைகளாகும்.
இந்த நாட்டின் அரசியலில் பங்கெடுத்துள்ளோம், எனவே ஏனைய சமூகங்களுக்குரிய உரிமைகள், வசதிகள், வாய்ப்புகள் ஆகியவை முழுமையாக எங்கள் சமூகத்திற்கு கிடைக்க வேண்டும். அதுவே எங்களுடைய இலட்சிய நோக்கமாகும்.
இவற்றையெல்லாம் அடைவதற்காக முழு வீச்சில் எம்பணிகளை நாம் முன்னெடுத்து செல்வோம். இதற்கு முழு சமுதாயமும் ஒருங்கிணைந்து அமோக ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி மென்மேலும் எமது இ. தொ. காவை பலப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. எமது இலட்சியப் பணிகளை ஒருக்கிணைத்து மேற்கொள்ள இந்த பொங்கல் பெருநாளில் திடசங்கற்பம் பூணுவோமாக.