ஜனாதிபதி தலைமையில் கண்டியில் பொங்கல் விழா

pongal-02.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மாபெரும் பொங்கல் விழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ அமைப்பின் விரிவான ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சமூக, சமய அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள் இவ்விழாவில் முக்கிய இடத்தை வகிக்கும். பொங்கல் விழா நிகழ்வுகளை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் செய்யவுள்ளது.

சமாதானமும், செளபாக்கியமும், நம்பிக்கையும் நிலைத்து நிற்கட்டும் ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து

உலகெங்கிலும் பரந்துவாழும் தமது இந்து சகோதரர்களோடு சேர்ந்து தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இவ் வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தை மாதத்தின் முதல் தினத்தில் வருகின்ற தைப்பொங்கல், மரபுகளையும், கிரியைகளையும் இந்துக்கள் தொடர்ந்தும் அனுஷ்டித்துவருகின்றனர்.  இரு விதங்களில் புனிதமாகக் கருதப்படுகின்ற இத்தினம் சிறந்த அறுவடையை எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடின உழைப்புக்குப் பின்னர் பெற்ற அறுவடைக்காகவும் அதை அளித்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும்.

தைப்பொங்கல் பண்டிகையானது இந்துக்கள் தமது பாரம்பரிய கலாசார மரபுரிமைகளை அனுஷ்டித்து அவற் றுக்கு தம்மை அர்ப்பணித்து, அவற்றைப் புதுப்பித்து எமது நாட்டின் ஏனைய மக்களைப் போல எதிர்காலம் குறித்த சாதகமான எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். இது எமது சமூகத்தின் பன்மைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இத்தைப்பொங்கல் தினத்தில் எனது எண்ணங்கள் எல்லாம் தங்களை விடுவிப்பதற்காக போராடுகின்றோம் என உரிமை கோருபவர்களாலேயே தொடர்ச்சியாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பற்றியதாகும்.  இவ்விசேட தினத்தில் இலங்கைவாழ் இந்துக்களினதும் என்னுடையதும் சகோதர, சகோதரிகளான தமிழ் மக்கள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து உண்மையாக விடுவிக் கப்பட்டு இலங்கையின் வடக்கே சுதந்திரமும் ஜனநாயக மும் மீளக் கட்டியெழுப்பப்படும் நாள் மிகத் தூரத்தில் இல்லை என்பதை இலங்கைவாழ் இந்துக்களுக்கு உறுதிபடத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கைவாழ் அனைத்து இந்துக்களுக்கும் நான் மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மலரும் வருடத்தில் எம்மிடையே சமாதானமும் செளபாக்கியமும் நல்ல நம்பிக்கையும் புரிந்துணர்வும் நிலைக்கட்டும் என்ற அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *