அண் மையில் வெளியான 2008 க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை நிலைநாட்டிய கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செய்னுலாப்தீன் பாஹிமா இன்று புதன்கிழமை காலை திருகோணமலையில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு நடத்தவிருக்கும் பொங்கல் நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.
இன்றைய தினம் கடந்த வருடத்தில் வெளியான க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை புரிந்த காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மாணவி எஸ்.ஷாலினியும் பாராட்டப்பட்டு கௌரவிக்கப் படவிருப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது. இளம் புத்தாக்குநர் கழகங்களுக்கு இடையே கிழக்கு மாகாண மட்டம், தேசிய மட்டம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட புத்தாக்கக் கண்டுபிடிப்புக்களில் மாகாண மற்றும் தேசியநிலையில் சிறந்தவை எனத் தெரிவு செய்யப்பட்ட புத்தாக்கங்களை கண்டுபிடித்த மாணவரும் இப்பொங்கல் நிகழ்வில் கௌரவிக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீரா திஸநாயக்க கலந்துகொள்வார். மாகாணக் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில், கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன