ஐக்கிய தேசியக் கட்சியில் சில காலம் நான் தொடர்புபட்டிருந்ததால் எனக்கு ஏற்பட்ட அந்தப் பாவத்தை சம நிலைப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடினேன். நுவரெலியா மாவட்டத்தில் ஐ. ம. சு. கூட்டமைப்பு சார்பில் மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எனக்கு நிச்சயமாக வெற்றிகிடைக்கும் என மத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எஸ். பி. திஸாநாயக்காவின் (ஐ. தே. க.) சகோதரரான முன்னாள் மத்திய மாகாண சபையின் சுகாதார அமைச்சர் சாலிய திஸாநாயக்க தெரிவித்தார்.
ஹங்குரன்கெத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இக் கூட்டத்தில் சாலிய திஸாநாயக்க தொடர்ந்தும் கூறியதாவது :- மத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எனது மூத்த சகோதரரான எஸ். பி. திஸாநாயக்க 15ஆம் திகதி ஐ. தே. கட்சியில் இருந்தும் விலகி மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயல்படவேண்டி ஏற்படும். நான் ஐ. தே. கட்சியில் இருந்த காலப் பகுதியில் எனக்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து வரப்பிரசாதங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நாட்டை சீரான வழியில் கட்டியெழுப்பத் துணிந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்தேன்.
அந்தக் கட்சியில் இருந்த காலப் பகுதியில் என்னை சூழ்ந்து கொண்ட பாவங்களுக்கு மன்னிப்பைத் தேடும் வகையிலும் அதனைச் சமநிலைப்படுத்துவதற்குமாக ஜனாதிபதியுடன் எனது இரு சகோதரளுடன் இணைந்துகொண்டேன். இவ்வாறு இணைந்ததெல்லாம் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் மேம்பாட்டுக்காகவே ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.