பொது மக்களின் அவலநிலையைப் போக்கவும், அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடனும் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இதன் காரணமாக, நல்லலெண்ண அணுகுமுறையாக மீள்குடியேற்ற அமைச்சர் வடக்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் கூட்டமைப்பையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 534 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை யாழ்.பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மோசமான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்காக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்கள். மீள்குடியேற்ற அமைச்சருடன் நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வுகளில் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரையும் கலந்து கொள்ளுமாறும் எழுத்து மூலமான பதிலைத் தந்தார்.
-இவ்வாறு மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.