மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள், வெடிபொருட்களை மீட்கும் பணி தொடரும்

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடெங்கிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் மீட்கும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அதேநேரம் நாட்டில் மீண்டுமொறு தடவை பயங்கரவாதம் தலை தூக்க முடியாத வகையில் சகல பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்றம் நேற்று பகல் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளின் பின்னர் பிரதமர் அவசரகாலச் சட்ட பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொழும்பில் ஆங்காங்கே நகரின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த காவலரண்கள், மூடப்பட்டிருந்த வீதிகள் திறந்து விடப்பட்டுள்ளன. மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மக்களுக்கு தேவையான வசதிகளை படிப்படியாக செய்து கொடுக்க தீர்மானித்து இருப்பதுடன் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கான தேவையும் எழுந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதியும் முல்லைத்தீவு பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. பரந்தன், முல்லைத்தீவு வீதியில் நெற் களஞ்சியத்திலும் பெருந்தொகை ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. அக்டோபர் 29 ஆம் திகதி வவுனியாவிலும் பீரங்கிக் குண்டுகளும் மீட்கப்பட்டன. அக்டோபர் 14 ஆம் திகதி வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மலையகத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சட்டத்தையும் ஒழுங்கையும், தொடர்ந்தும் பாதுகாப்பதற்கும் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்க வேண்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *