கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. குருகுலராஜா தொடர்ந்தும் கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளராக பணியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை வவுனியாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கும் திரு. குருகுலராஜாவிற்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் குருகுலராஜா திடீரென அவரது பணியிலிருந்து மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிளிநொச்சி கல்வித் திணைக்கள ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள் முதலானோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று வவுனியாவில் வடமாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி தருமபுரம் இலக்கம் ஒன்று பாடசாலை கட்ட அமைப்பிற்காக வடமாகாண ஆளுநர் அடிக்கல் நாட்டி வைத்த நிகழ்வு அண்மையில இடம்பெற்றது. ஆனால், அதன் கட்டப் பணிகள் தொடர காலதாமதம் ஏற்பட்டது. இதனால், ஆளுநரால் வலயக்கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.