ஜனாதிபதி வருகை தருவதற்கு முதல் நாள்- நேற்றிரவு வவுனியாவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று செவ்வாய்கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் வேளையில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா நகரின் மில்வீதியில் நேற்று திங்கள் கிழமை இரவு 9.30 மணியளிவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரும் சத்தத்துடன் இக்குண்டு வெடித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் வீதியில் நின்ற வாகனம் ஒன்றிலிருந்தே இக்குண்டு வெடித்ததாக குறிப்பிட்டனர்.
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ‘பிராடோ’ரக வாகனம் ஒன்றிற்குள்ளிருந்து இக்குண்டு வெடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாகன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகவும், வாகனத்திற்குள் கைக்குண்டு எறியப்பட்டதால் இது நிகழ்ந்ததெனவும் தனிப்பிட்ட பிரச்சினை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதென்றும் பலவாறாக இக்குண்டு வெடிப்புச்சம்பவம் குறித்து பேசப்படுகின்றது.
இச்சம்பவத்தில் இருவர் சிறுகாயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண அபிவிருந்தி தொடர்பான கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறும் நிலையில் எற்கனவே போடப்பட்ட பாதுகாப்பிற்கும் மேலாக அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.