உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வயாவிளான் மகாவித்தியாலயம் கடந்த செவ்வாய் கிழமை படையினரால் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் வைபவம் இடம்பெற்றிருந்த போதும் அப்பாடசாலைக் கட்டடங்களை புனரமைக்க வேண்டியிருப்பதால் அடுத்த வருடம் ஜனவரி மாதமே அது முழுமையாக கையளிக்கப்படும் என படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை வயாவிழான் பாடசாலை கையளிக்கப்படும் நிகழ்வு பெரியளவில் நடத்தப்பட்டது. அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர். மாணவர்கள் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர், வடமாகாண ஆளுநர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், அதிகாரிகள் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாடசாலைத் தளபாடங்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன. எனினும் அடுத்த நாளே அப்பாடசாலை உரும்பிராயிலுள்ள அதன் தற்காலிக கட்டடத்தில் மீண்டும் இயங்குகின்றது.
பாடசாலைக் கட்டடங்கள் புனரமைக்கப்பட வேண்டியிருந்தால் அவற்றைப் புனரமைத்து விட்டு ஜனவரி மாதமே அதனை ஆரமப்பிக்கும் நிகழ்வையும் நடத்தியிருக்கலாமே என அப்பாடசாலையின் பெற்றோர், மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.