அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது. இதற்காக இலங்கையில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூற்றை ஆராய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2020ற்கு முன் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.
சர்வதேச அணுசக்தி முகவர் அதிகார சபையின் 54 ஆவது அமர்வு வியன்னாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது:- இலங்கையை குறைந்த காபன் அளவுடைய எரிசக்தியை உற்பத்தி செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகவர் அதிகாரசபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.
இலங்கையில் எரிசக்தி தேவைகளை குறைந்த செலவினூடாக பூர்த்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான சிறந்த வழி அணு சக்தி உற்பத்தியை நோக்கிச் செல்வது என அரசாங்கம் உணர்ந்துள்ளது. இதற்காக அமெரிக்காவும் இந்தியாவும் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
மற்றவர்களுக்கு பாதிப்பில்லாதவாறே அணுசக்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். நாம் ஒருபோதும் ஏனைய நாடுகளை ஆக்கிரமித்ததும் கிடையாது அதற்காக முயன்றதுமில்லை. இலங்கையில் அணுசக்தி நிலையம் அமைப்பதால் எந்த நாட்டுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.