ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வருடாந்த தேசிய மாநாட்டில் முன்வைக்கப் பட்ட மூன்று பிரேரணைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
அரசியல் யாப்பு திருத்தப் பிரேரணை, பொருளாதார சுபீட்சப் பிரேரணை, ஐக்கியத்தின் ஊடாக எதிர்காலத்தை வெற்றி கொள்ளல் பிரேரணை ஆகிய மூன்று யோசனைகளுமே இம்மாநாட்டில் ஏகமனதாக நிறைவேறின.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வெற்றிகரமான தேசிய வருடாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம் மாநாட்டின் போதே இந்த யோசனைகள் நிறைவேறின.
அரசியலமைப்பு திருத்தப் பிரரேரணையை பிரதமர் டி. எம். ஜயரட்னவும், பொருளாதார சுபீட்சம் தொடர்பான பிரேரணையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், ஐக்கியத்தின் ஊடாக எதிர்காலத்தை வெற்றி கொள்ளல் பிரேரணையை அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் இம்மாநாட்டில் சமர்ப்பித்தனர். மாநாட்டில் பங்கு பற்றிய சகல பேராளர்களும் தங்களது கரங்களை உயர்த்தி இந்தப் பிரேரணைகளை ஏகமனதாக நிறைவேற்றினர்.