கடந்த காலத்தை மறந்து விட்டு எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள் என்று யாழ்ப்பாண மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் குடாநாட்டு மக்கள் கூறுபவற்றை செவிமடுக்கவும் காயங்களை ஆற்றுப்படுத்தவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்.நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது; கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள்.
கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை. இதேவேளை உங்களது நலன்புரி நடவடிக்கைகளுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் உணர வேண்டும். கடந்த காலங்கள் குறித்து சிந்திப்பதற்கு நேரமில்லை. உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்திக் கேட்கிறேன்.
இந்தியா உங்களது நெருக்கமான அயல்நாடு, நட்பு நாடு, கடந்த காலங்களில் பல விடயங்கள் நடந்திருக்கலாம். அதனை மறந்து எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள். இவ்வாறான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் எவையும் உங்களது சிறந்ததொரு எதிர்காலத்திற்கு உதவப்போவதில்லையெனத் தெரிவித்தார்.