தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி என்பவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இவர் காணமாமல் போயுள்ளமை குறித்து மாநகரசபை மேயரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை மேயர் சிவகீதா பிரபாகரனை அவரது வீட்டில் சந்தித்து விட்டுத் திரும்புகையில் இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாநகர சபை உறுப்பினரான இவர் காணாமல் போயுள்ள சம்பவத்தையடுத்து ஏனைய மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் காணாமல் போயுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.