வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் ஏ9 வீதியால் செல்வதற்குத்தடை இல்லை

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக வடபகுதி செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சால் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறான எந்தத் தடையும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லை என அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஏ9 பாதையூடாக யாழ்.குடாநாட்டுக்குச் செல்வதற்கே இந்தத் தடைப் பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவியிருந்தன.

எனினும் அவ்வாறான புதிய விதிமுறைகள் எதுவும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லையென தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல மற்றும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

இது பற்றி லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகையில் “அவ்வாறான எதுவும் இல்லை. யாழ்ப்பாணம் செல்லத் தரை வழியைப் பயன்படுத்த முடியும். எனினும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அதற்கு முன்னதாகப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். அதை விடுத்து தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அத்துடன் இது பொலிஸாருடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல. இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றார்.

இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மெதவல இது பற்றி தெரிவிக்கையில்; “உத்தியோகபூர்வமாக அவ்வாறான எந்தத் தடை உத்தரவும் பாதுகாப்பு அமைச்சிலிருந்து பிறப்பிக்கப்படவில்லை. வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்குச் செல்வதற்குச் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் கூறும் காரணத்திற்கு ஏற்ப அவர்களை எந்த வழியில் அனுமதிப்பதென அமைச்சு தீர்மானிக்கும். எனவே ஆதாரமற்ற தகவல்களில் குழப்பமடையத் தேவையில்லை என்று கூறினார்.

யாழ்.குடாநாடு செல்லும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை கொண்டோர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை கொழும்பு காலி முகத்திடல் பகுதியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் நுழைவாயிலுள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *