தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கத் தயார் : ரணில்

unp_logo_.jpgஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தனது தலைமைத்துவம் குறித்து கவலையடைந்தால் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்தியாவுக்கு திங்கட்கிழமை பயணமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னராக இதனைக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ரணில் கூறியிருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன. “உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிடின் தான் பதவி விலக விரும்புவதாக சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரிடம் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஆயினும் இதுவரை எவரும் அதுதொடர்பாக பதில் அளிக்கவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

20 தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து வந்துள்ள ஐ.தே.கட்சி தற்போது தலைமைத்துவம் தொடர்பாக நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க பதவியைத் துறந்து புதிய தலைவருக்கு வழிவிட வேண்டுமென்று ஐ.தே.க.வின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர உட்பட ஐ.தே.க. உறுப்பினர்கள் கட்சியை மறுசீரமைப்பதற்கான யோசனைகளை முன்வைத்தள்ளனர்.

இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் குழுக்கூட்டம் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொகுதி அமைப்பாளர்களின் குழுக் கூட்டம் இந்தவார இறுதியில் நடைபெறவிருந்தது. இந்நிலையில், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவின் செயற்பாட்டுக்காகவே இக்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

மறுசீரமைப்புக் குழு ஜூலையில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளதால் அக்குழுவின் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கும் வகையிலேயே பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்த முடிவினைக் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகத் தொகுதி அமைப்பாளர்களுக்குக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *