கிளிநொச்சி, முல்லைத்தீவு வணிகர்கள் தங்களுக்கான நட்ட ஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த நட்டஈட்டுப் படிவத்தை பூர்த்தி செய்யாத வணிகர்கள் அதற்கான படிவங்களைப் பெற்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒப்படைக்குமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வணிக, கைத்தொழில், வேளான் ஒன்றியம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட வணிகர்கள் கிளிநொச்சி கனகபுரத்திலுள்ள இலக்கம் 13, 2ஆம் பண்ணை எனும் முகவரிலும், முல்லை மாவட்ட வணிகர்கள் முதலாம் யுனிற், யோகபுரம், மல்லாவி எனும் முகவரியிலும் உள்ள அலுவலகங்களில் இப்படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு இவ்வொன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதே வேளை, இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற பகுதிகளிலிருந்து மீட்கபட்டு, கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள ஐயாயிரம் மோட்டார் சைக்கில்களில் நூறு மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், ஏனையோர் தங்கள் மோட்டார் சைக்கில்களை அடையாளம் காட்டுவதற்கா கால அவகாசம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பொதுமக்களால் கைவிடப்பட்ட ஐயாயிரம் மோட்டர் சைக்கிள்களும், ஏழாயிரம் சைக்கில்களும் முதற்கட்டமாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் ஜி,ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களில் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்
வவுனியா நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களில் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்பட உள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி எஸ். சுhர்ள்ஸ் தெரிவித்தள்ளார்.இதே வேளை வவுனியா மாவட்டத்திலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமாகக் கருதப்பட்ட சில பகதிகளிலிருந்து இராணுவம் தமது முகாம்களை அகற்றும் பணியினை ஆரம்பித்துள்ளதாகவும் இதில் முதற் கட்டமாக பேயாடி கூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 60 குடும்பங்கள் மிளக்குடியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.