அரசியல் யாப்பில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான திருத்த மசோதா இரு வாரங்களுக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஒரு மாதத்தினுள் அரசியல் யாப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,
பொருளாதாரத்தை பலப்படுத்தவும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் பிரகாரம் ஆசியாவின் முன்னோடியாக இலங்கையை அபிவிருத்தி செய்யவும் ஏற்றவாறு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அமைச்சர் ஜீ. எல். பீரிஸின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறையில் மாற்றம், 17 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தம், செனட் சபை அடங்கலான பல திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள் ளன. அரசியலமைப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. திருத்த மசோதா இரு வாரங்களில் அமைச்சரவை யின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஜூன் மாதத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இந்த திருத்த மசோதா சமர்ப்பிக்கப்படும்போது சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு தமது யோசனைகளை முன்வைக்க முடியும். தற்பொழுதுள்ள தேர்தல் முறையினால் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் தெரிவாவதில்லை. விருப்பு வாக்கு முறையினாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிராமத்திற்கு ஒரு உறுப்பினர் தெரிவாகும் வகையில் மாற்றப்படும். 17ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தவும் அதனூடாக சுயாதீன ஆணைக் குழுக்களை திறம்பட இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செனட் சபைக்கு 9 மாகாணங்களில் இருந்தும் ஒரு பிரதிநிதி தெரிவாக உள் ளார். குறைந்த பட்சம் 25 உறுப்பினர்கள் செனட் சபையில் அங்கம் வகிப்பர். இன ரீதியான பிரச்சினைகள், அரசியலமைப்பு அடிப்படையிலான பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையில் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் செனட் சபை செயற்படும் என்றார்.
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இது பற்றி இங்கு கருத்து வெளியிடும் போது செனட் சபை முறைமை பற்றி குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும்போது பாராளுமன்றத்தினால் மாகாண சபைகளுக்கு சட்டமொன்றை விதிக்க முடியும்.இவ்வாறான சூழ்நிலைகளில் மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தி அங்குள்ள பிரச்சினைகள் பற்றி பேசும் ஒரு ஏற்பாடாகவே இந்த செனட் சபை அமையும்.இதில் 25 இற்கு மேற்படாத உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் அநேகமாக ஒவ்வொரு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள் அந்தந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இருக்கக் கூடும்.எனினும் இந்த ஏற்பாடானது இப்படிதான் இருக்குமென்பதை இப்போதே உறுதிபடத் தெரிவிக்க முடியாது என்று அமைச்சர் பிரேம ஜயந்த தெரிவித்தார்.