சபையின் கெளரவம் பேணப்பட வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

ranil.jpgஎதிர்க் கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறுவதற்கான உரிமை பேணப்படுவதுடன் சபையின் கெளரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய சபாநாயகரைப் பாராட்டி உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். “நாம் எல்லோரும் சேர்ந்து சபாநாயகரைத் தெரிவு செய்துள்ளோம். 1989 முதல் உங்களுடன் (சபாநாயகருடன்) பழகி இருக்கிறேன்.

இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. நான் சபையில் இல்லாதபோது தான் எங்கள் கட்சியினர் உங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள். நீங்கள் இங்கு ஒரு கட்சியின் சார்பில் அமரவில்லை. முழுப் பாராளுமன்றத்தின் சார்பிலும் தெரிவாகியுள்Zர்கள்.

எனவே நீங்கள் இந்தப் பாராளுமன்றத் தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். எமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டும். 1835 இலிருந்து ஆசியாவின் பழைமையான பாராளுமன்றமாக இது விளங்குகிறது.

இந்தச் சபையின் உரிமைகளைப் பாதுகாப்பீர்கள் என நம்புகிறேன். புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் முன்னாள் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். புதிய உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *