இலங்கை யின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை இலங்கையில் நடத்த முடிவு செய்ததாக பிரபல இந்தியத் திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்தார். இலங்கைக்கு நேற்று வருகை தந்த நடிகர் அமிதாப்பச்சன் நேற்று பிற்பகல் கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தென் ஆசியாவின் மிகப்பெரிய ஊடக நிகழ்வாக கருதப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவும் வார இறுதி களியாட்ட நிகழ்வுகளையும் இலங்கையில் நடத்துவதையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். அனுபவங்களை உபசரிப்பதில் தலைசிறந்த எமது அயல் நாடான இலங்கைக்கு கொண்டு வருவதன் மூலம் திரையுலக அங்கத்தவர் என்ற முறையில் இன்னொரு வண்ணமயமான தசாப்தத்தை எதிர்பார்க்கிறேன்.
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் போது இந்திய திரை அசைவுகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும், அற்புத பொக்கிஷமான இலங்கைத் தீவை உலகத்தோடு பகிர்ந்து கொள்ள முடியுமென எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில் ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வார இறுதி நிகழ்வுகளின் போது நடைபெறவுள்ள குளோபல் பிஸ்னஸ் போரம் 2010 நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இச் சந்திப்பானது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே ஒரு தொடர்புப் பாலமாகவும் வர்த்தக மற்றும் சினிமா தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சியாகும். இருதரப்பு பொருளாதாரம், அரசியல், சினிமாத்துறை உட்பட பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் தளமாக இது அமையும்.
விருது வழங்கும் விழாவை நடத்துவதன் மூலம் எமது நாட்டிற்கே உரிய தனித்துவத்தையும் எழிலையும் உலகத்துக்கு எடுத்துக்காட்ட கிடைத்த இந்த மகத்தான சந்தர்ப்பத்திற்காக சர்வதேச இந்திய திரைப்பட அகடமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே. ஏ. டி. ஜோர்ஜ் மைக்கல் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல யாகொட இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜிட் கப்ரால், பிரபல நடிகர்களான ஜக்சன் அந்தனி, ரவீந்திர ரந்தெ னிய, அக்கடமியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சுபாஷ் ஜோசி ஆகியோரும் உரையாற்றினர்.