மட்டக்களப்பு வவுணதீவு இருட்டுச் சோலை மடு விஷ்ணு வித்தியாலயத்தில் 118 மாணவர்கள் திடீர் சுகவீனமுற்றது தொடர்பில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
சிவராசா கோதையம்மா (42) என்ற பெண்ணே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமையன்று பாடசாலையில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் பாடசாலையின் கிணற்று நீரை அருந்திய மாணவர்கள் திடீர் மயக்கம், வாந்தி, வயிற்று நோவு என்பனவற்றால் பாதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 118 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு மாணவர்களுக்கான உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. மாணவர்களில் 115 மாணவர்கள் குணமடைந்து நேற்றுக் காலை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்களுக்கும் தொடர்ச்சியான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதே நேரம் இப்பாடசாலைக்குச் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று அப்பாடசாலையின் கிணற்று நீர் மற்றும் சுற்றுப்புற சூழல் என்பனவற்றை பரிசோதித்துள்ளனர். இப்பாடசாலையின் கிணற்று நீர் பரிசோதனைக்காக கொழும்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலை நேற்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.