தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்

பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.

இதேவேளை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிக்கப்போவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று (26) அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் எட்டாந் திகதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 430 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நேற்றும் முன்தினமும் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி 75 வீதமான அரச உத்தியோகத்தர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு இடம்பெற்ற தினங்களில் குறித்த அரச அலுவலகங்கள் வாக்குச் சாவடிகளைப் போல் இயங்கின. தெரிவத் தாட்சி அதிகாரியாகக் கடமையாற்றிய அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த எவரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்ததுடன், வன்முறைகளைக் கண் காணித்து அறிக்கையிடும் குழுக்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தபால்மூல வாக்களிப்பின்போது பாரிய அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லையென்றும், தேர்தல் சட்ட விதிகளை மீறிய சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இதில் 45 வீதமான முறைப்பாடுகள் வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இல்லை என்றும், சட்ட விரோத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதென்றும், வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லையென்றும் முறையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இருக்காததால், பெருமளவு வாக்குகள் அளிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாக வன்முறை கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வன்முறை கண்காணிப்பாளர் குழுக்கள் சில தேர்தல்கள் ஆணையாளரை நேற்றுச் சந்தித்துள்ளன. தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வாக்குகளை எண்ணும் நிலையங்களில் தமது வன்முறை கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வீதம் நியமிக்குமாறு ஆணையாளரைக் கேட்டுக் கொண்டனர். எனினும் ஆணையாளர் இதனை நிராகரித்துவிட்டதாகக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

மாறாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதாக ஆணையாளர்அறிவித்ததாக அந்தப் பிரதிநிதி மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *