ஊடக வியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக இதுவரை பதியப்பட்ட வாக்கு மூலங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
லசந்தவின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 17 பேருள் 11 பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீண்டும் இராணுவ சேவைக்கு உள்வாங்கப்பட்டும் உள்ளனர். எஞ்சியுள்ள 6 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் மேலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த 4ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் லசந்தவின் படுகொலை தொடர்பான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 18ஆம் திகதியும் இதே போன்று சாட்சியங்கள் சமர்ப்பிக்கப் படவுள்ளன என்றும் தெரிவித்தார்.
லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகளின் ஊடாக குற்றவாளி யார் என்பதை கண்டறிவதற்கு சான்றுகள் ஏதேனும் கிடைத்துள்ளனவா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,
இதுவரை கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டறிவதற்குரிய சரியான விசாரணைகளையே பொலிஸார் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.