சரத் பொன்சேகாவின் கூற்றினால் எழுந்துள்ள நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டமைச்சு நாட்டுக்குப் பாதிப்பில்லாத வகையில் பதிலொன்றைத் தயாரித்து ஐ. நா. வுக்கு அனுப்புமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தனது கூற்று தவறானது என சரத் பொன்சேகாவே கடிதமொன்றை ஐ. நா. விற்கு அனுப்பினாலொழிய இந்நெருக்கடி ஏற்படுத்தும் பாதிப்பை தவிர்க்க முடியாது என தெரிவித்த அமைச்சர் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்குப் பின் இது தொடர்பிலான அனைத்து நெருக்கடிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.
தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-
ஐ. நா. விடமிருந்து இவ் விவகாரம் தொடர்பான மூன்று முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளித்தாக வேண்டியுள்ளது. இவ் விவகாரமானது அரசியல் ரீதியாகவும் பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் இவ் விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் ஐ.நா. வைத் திருப்திப்படுத்த முடியாது.
சரத் பொன்சேகா அரசியல் இலாபத்திற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டை வெளியிட்டதாகவும் வடக்கு தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே இவ்வாறு செய்ய நேர்ந்ததாகவும்ää தாம் குறிப்பிட்டுள்ளது போன்று ஒரு சம்பவம் நடக்கவில்லையென்றும் கடிதமொன்றை ஐ.நா. வுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் இப் பிரச்சினை இலகுவாகும். இல்லாவிடில் இப் பிரச்சினை பூதாகாரமாகி பல நெருக்கடிககளை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும்.